Thursday, December 6, 2018

சொத்தை அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு

Image may contain: text
சொத்தை அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் என்பவர் தன்னை சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்க கோரியும், யாரும் இடையூறு செய்யக் கூடாதென நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரியும் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரவிகிருஷ்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முதல் மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இரண்டாவது மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றமும் ரவிகிருஷ்ணின் சொத்துரிமையை ஏற்று, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை 7.8.2017 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.
ஆனால் அதன்பிறகும் சொத்தை அனுபவிக்க பிரதிவாதி இடைஞ்சல்கள் செய்ததால் ரவிகிருஷ்ண் பாதுகாப்பு கேட்டு சேலம் காவல்துறையில் 30.8.2017 ஆம் தேதி ஒரு மனுவை அளித்தார். ஆனால் அந்த மனுவின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிகிருஷ்ணன் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. M. S. இரமேஷ் விசாரித்தார்.அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் இரண்டாவது மேல்முறையீட்டில் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதி மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.
ரவிகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரதிவாதி தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனு நீதிமன்ற கோப்பிற்கு ஏற்று கொள்ளப்படவில்லை. மேலு‌ம் அந்த மறுஆய்வு மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி....ஓர் உரிமையியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒருவர் சொத்தை அனுபவிக்க ஏதாவது இடையூறுகளோ அல்லது மிரட்டல்களோ ஏற்பட்டால், காவல்துறையினர் உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த, தீர்ப்பை பெற்றவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இது காவல்துறையின் சட்டப்பூர்வமான கடமையாகும். தீர்ப்பு அடிப்படையில் பாதுகாப்பு கேட்டு கொடுக்கப்படும் மனுக்களை காவல்துறையினர் கிடப்பில் போடக்கூடாது. உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறி, ரவிகிருஷ்ணன் சொத்தை நிம்மதியாக அனுபவிக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
CRL. OP. NO - 25255/2017,  DT - 14.2.2018
T. ரவிகிருஷ்ணன் Vs காவல் ஆணையர், சேலம் மற்றும் பலர்
2018-1-MWN-CRL-447

No comments:

Post a Comment